Skip to main content

எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உட்பட 12 பேர் அதிரடி கைது...

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

lg polymers ceo arrested

 

விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவுக்குக் காரணமான எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. உட்பட 12 பேர் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக்கசிவால் 15 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அம்மாநில நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், விசாரணை முடியும்வரை ஆலையைத் திறக்கவோ, ஆலைக்குள் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் எதுவும் வேறு இடங்களுக்கு மாற்றவோ கூடாது என உத்தரவிட்டனர். அதே போல ஆலையின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும்வரை ஆலையின் இயக்குநர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது எனவும் அறிவித்தது. இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று அதிகாரிகளை ஆந்திர அரசுப் பணியிடை நீக்கம் செய்தது.

 

மேலும், ஆந்திர அரசு இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த நீரப்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இந்த விசாரணையில், விபத்தின் போது தொழிற்சாலையில் உள்ள 36 சைரன்களுமே வேலை செய்யவில்லை எனவும், இதற்கு மனிதத் தவறே காரணம் எனவும் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் நகரக் காவல் ஆணையர் மீனா தலைமையிலான போலீஸார் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சங்-கீ-ஜாங், தொழில்நுட்ப இயக்குநர் டி.எஸ். கிம் கொரியன், கூடுதல் இயக்குநர் பூர்ண சந்திரராவ் உட்பட 12 பேரைக் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.