Skip to main content

"எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்" - பிரசாந்த் கிஷோர்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

prashant kishor

 

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையொட்டி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை மம்தா சந்தித்தார். இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் இரு கட்சிகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இதனால் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்திக்குமா என கேள்வியெழுந்தது.

 

இதனைத்தொடர்ந்து நேற்று (01.12.2021) மும்பையில்  சரத் பவாரை சந்தித்த மம்தா, "நடந்துகொண்டிருக்கும் பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை. எனவே வலிமையான மாற்றுப்போக்கை உருவாக்க வேண்டும். சரத் பவார் மூத்த தலைவர். அவர் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை" என கூறினார்.

 

இது மம்தா, மூன்றாவது அணி அமைக்க முயல்வதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மம்தாவுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, "ஒட்டுமொத்த இந்தியாவும் 'மம்தா, மம்தா' என்று கோஷமிட ஆரம்பித்துவிட்டதாக அவர் நினைக்கிறார். ஆனால் இந்தியா என்பது மேற்கு வங்கம் மட்டுமல்ல. மேற்கு வங்கம் மட்டும் இந்தியா அல்ல. இன்று அவருக்குப் பின்னால் மோடி நிற்பதால் அவரது பலம் அதிகரித்துள்ளது. எனவே, காங்கிரசைப் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். பாஜக இந்தியா முழுவதும் போராடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு ஆக்சிஜனை வழங்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மம்தா பானர்ஜி பாஜகவின் ஆக்சிஜன் சப்ளையர் ஆகிவிட்டார்" என விமர்சித்திருந்தார்.

 

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையை விமர்சித்துள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும், வெளியும் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90%க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல. எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்" என கூறியுள்ளார். மம்தாவின் பிரதமர் கனவை வெளிக்காட்டும் வகையில் இந்தப் பதிவு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.