Skip to main content

"சட்டப்படி சரியான பக்கத்தில் உள்ளோம்" - மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக புதிய முதல்வர் கருத்து!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்ட நாட்களாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று முன்தினம் (26.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இதன் தொடர்ச்சியாக பசவராஜ் பொம்மை, இன்று முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் அவரிடம் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மேகதாது விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சட்டப்பூர்வமாக நாங்கள் சரியான பக்கத்தில் இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "காவிரி படுகையில் உள்ள உபரி நீரைப் பயன்படுத்துவது எங்களின் உரிமை" எனவும் கூறியுள்ளார். மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக முயற்சி மேற்கொண்டு வருவதும், தமிழ்நாடு அதைத் தீவிரமாக எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உதயநிதிக்கு ஹிட்லர் என்ற பெயர் சரியாக பொருந்தும்” - பசவராஜ் பொம்மை

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Basavaraj Bommai says the name Hitler is suitable for Udhayanidhi

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.

 

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, 'கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம். ஆனால் சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு'' எனத் தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த அமித் மாளவியா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்” என குறிப்பிட்டார். இதற்கு அமைச்சர் உதயநிதி, "சனாதனத்தை பின்பற்றுபவர்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூக சீர்கேடுகளுக்கு சனாதனம் தான் காரணம்” என பதிலடி கொடுத்தார்.

 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “இதுதான் இந்நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பணயம் வைத்து ஆட்சிக்கு வருவதற்காக ஒன்றிணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளின் மனநிலை. இது ஜனநாயக விரோதமானது. மனித நேயத்திற்கே எதிரானது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. ஹிட்லர் என்ற வார்த்தை உதயநிதிக்கு சரியாக பொருந்தும்” என கடுமையாக சாடியுள்ளார். 

 

 

 

Next Story

''மன்னிக்க முடியாத குற்றம்'' - கொதிக்கும் முன்னாள் முதல்வர்கள்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

"Unforgivable crime"-Simmering ex- chief ministers

 

டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

 

தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் நீர் திறக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

 

"Unforgivable crime"-Simmering ex-prime ministers

 

அதேநேரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமியும் கர்நாடகாவில் நீர் திறந்ததற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டை ஆளும் திமுகவை திருப்திப்படுத்தவும், இந்தியா கூட்டணி ஒற்றுமைக்காகவும் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துள்ளது. காங்கிரஸ் பெரிய நாடகத்தை உருவாக்கி கர்நாடகா மக்களை முட்டாளாக்கியுள்ளது. பெங்களூர் நகரம் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. கர்நாடகத்தின் நிலையை காங்கிரஸ் அரசால் ஏன் உச்ச நீதிமன்றத்தில் விளக்க முடியவில்லை. சட்ட வல்லுநர்களுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்காமல் தமிழ்நாட்டுக்கு நீரை விடுவித்த ரகசியம் என்ன? டி.கே.சிவகுமார் கர்நாடகா அமைச்சரா அல்லது தமிழ்நாட்டுக்கான அமைச்சரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நீர்த்தேக்கத்தின் சாவி ஒன்றிய அரசிடம் உள்ளது என கர்நாடக காங்கிரஸ் குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன' என பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

 

"Unforgivable crime"-Simmering ex-prime ministers

 

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியிருந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மீண்டும் இரண்டாவது முறையாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது முறையாக அவர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு இரண்டு மடங்கு தண்ணீரை பயன்படுத்தி உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு இதை முறையிட்டிருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக காவிரியில் இருந்து நீர்  திறந்து விடப்பட்டிருப்பது கர்நாடக அரசு செய்த மன்னிக்க முடியாத குற்றம். கர்நாடக விவசாயிகளுக்கு முதலில் தண்ணீரை திறந்து விடாமல் அணையில் சேர்த்து வைத்த தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து வைத்துள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என முதலமைச்சர் சித்தராமையா சொன்ன மறுநாளே துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்வளத்துறை காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. கர்நாடகத்தின் உண்மை நிலையை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.