Skip to main content

ராகுலுக்கு வழி காட்டும் லட்சத்தீவு எம்.பி. வழக்கு! 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Lakshadweep mp faizal case

 

லட்சத்தீவின் தலைநகரமான கவரட்டியில் உள்ள கவரட்டி நீதிமன்றம், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினரான முகமது ஃபைசலை கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றச் செயலகம், முகமது ஃபைசலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது. 

 

முகமது ஃபைசல், கவரட்டி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி கவரட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், முகமது ஃபைசலின் 10 ஆண்டுக் கால சிறைத்தண்டனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்த வழக்கில் லட்சத்தீவு நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீட்டில், கேரளா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. 

 

இந்த உத்தரவைத் தொடர்ந்து முகமது ஃபைசல் நாடாளுமன்ற செயலகத்திற்கு, தீர்ப்புக்கும் சிறைத் தண்டனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதினார். அதேபோல், அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் சார்பிலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, முகமது ஃபசலின் எம்.பி. பதவி திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றச் செயலகம் முகமது ஃபைசல் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறாமல் இருந்தது. இதன் காரணமாக முகமது ஃபைசல், ‘சிறைத் தண்டனைக்கும் தீர்ப்புக்கும் தடை வாங்கி இரண்டு மாதங்கள் கடந்தும் நாடாளுமன்றம் என் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறவில்லை’ என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

 

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றச் செயலகம், முகமது ஃபைசல் தகுதி நீக்கத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. 

 

Lakshadweep mp faizal case

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதே தீர்ப்பில் சூரத் நீதிமன்றம், ராகுல் மேல்முறையீடு செய்துகொள்ள ஒரு மாதம் அவகாசம் வழங்கியது. ஒருவேளை ராகுல், மேல்முறையீடு செய்து சூரத் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வாங்கினால் ராகுலின் எம்.பி. பதவி மீண்டும் அவருக்குத் திரும்ப வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்