Skip to main content

ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி... டெல்லி எய்ம்ஸ்-ல் இருந்து மாற்றம்

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மாட்டு தீவன ஊழல் உட்பட நான்கு  வழக்குகளில் மொத்தம் 27 வருட சிறை தண்டனை பெற்று ஜார்கண்டின் ராஞ்சி நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவருக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டது. 
 

lalu

 

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுநீரகம் மற்றும் இதயம் சார்ந்த சிறப்பு சிகிச்சைகள் எடுத்து வந்த முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல் நலம் தேறி விட்ட நிலையில் அவரை ராஞ்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியது. 

 

இதனையடுத்து இன்று அவர் ரெயில் மூலம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டார். அவரது வருகையை எதிர்பார்த்து ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் பலர் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். 

 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரெயிலில் இருந்து இறக்கப்பட்ட லாலு, சக்கர நாற்காலி மூலம் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் எனப்படும் ராஜேந்திரா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அங்குள்ள இதயநோய் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்