Kolkata doctors strike called off

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதே சமயத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ, சந்தீப் கோஷ் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் மருத்துவமனை முதல்வராக இருந்த போது சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கடந்த 3ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை நடத்திய தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டலையும் சி.பி.ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் மேற்குவங்கத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து 5 முறை போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்நிலையில் நாளை மறுநாள் பணிக்கு திரும்புவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பயிற்சி மருத்துவர்களின்40 நாட்களுக்கு மேலானபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.