ADVERTISEMENT

ராகுல் காந்தியின் யாத்திரை; பாதுகாப்பு வழங்கக்கோரி மம்தாவுக்கு கார்கே கடிதம்!

10:16 PM Jan 27, 2024 | mathi23

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்குப் பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கவுஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரை நாகலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நுழைய உள்ளது. அதன்படி, 2 நாள் ஓய்வுக்கு பிறகு இந்திய நியாய யாத்திரை மேற்கு வங்காளத்தில் நாளை (28-01-24) நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த யாத்திரைக்கு பாதுகாப்புக் கோரி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘அடுத்த சில நாட்களில் ஒற்றுமை நடைபயணம் மேற்கு வங்காளத்தின் வழியாக செல்கிறது. சில தீயவர்கள் நடைபயணத்திற்கு சிக்கலைத் தூண்டலாம் என எனக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தை மோசமாகக் காட்டுவது அல்லது நடைபயணத்தை சீர்குலைப்பது அவர்களது நோக்கமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பெங்கால் வழியாக நடைபயணம் சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்கும், நடைபயணத்தில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT