Skip to main content

இலவச நூலகம் நடத்தும் 11 வயது சிறுமி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

        ஒரு நூலகம் திறக்கப்பட்டால் 100 சிறைச்சாலைகளின் கதவுகள் பூட்டப்படும் என்பாா்கள். அந்த வகையில் கேரளா மாநிலம் கொச்சியின் அருகே மட்டஞ்சோி பகுதியை சோ்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி யசோதா இலவச நூலகம் ஒன்றை நடத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளாா்.

 

b


            மாணவி யசோதா 3-ம் வகுப்பு படிக்கும் போது தனது சகோதரனுடன் அங்குள்ள அரசு நூலகம் ஒன்றிற்கு சென்றுள்ளாா். அப்போது சகோதரன் அங்கிருந்து வாசிப்பதற்கு எடுத்து சென்ற புத்தகம் திருப்பி கொடுக்க தாமதம் ஆனதால் அவன் தாமத கட்டணத்துடன் புத்தகத்தை திருப்பி கொடுத்துள்ளான். அதே போல் நூலகத்துக்கு ஆண்டு சந்தா வசூலிப்பது எல்லாத்தையும் மாணவி யசோதா கவனித்திருந்தாள். 


          அப்போது தான் யசோதாவுக்கு அந்த சிறு வயதில் ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் கட்டணம் இல்லாமல் இலவசமாக நானே ஒரு நூலகம் நடத்த கூடாது என்று.....3-ம் வகுப்பில் அவள் போட்ட விதை 4-ம் வகுப்பில் பலன் கொடுத்தது. தான் சிறுக, சிறுக சோ்த்து வைத்தியிருந்த சேமிப்பு பணம் மற்றும் தனது தந்தை ஓவியரான தினேஷ் ஷெனாயின் உதவியுடன் தனது வீட்டு மாடியில் இலவச நூலகத்தை தொடங்கினாள் மாணவி யசோதா.


             இன்றைக்கு அந்த நூலகத்தில் 4 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. நூலகத்துக்கு  ஆண்டு சந்தா எதுவும் கிடையாது. அதே போல் வாசிக்க எடுத்து சென்ற புத்தகத்துக்கு தாமத கட்டணம் கிடையாது. நூலகத்துக்கு நுழைவு கட்டணம் கிடையாது. தற்போது இந்த நூலகத்தில் உறுப்பினா் அட்டை எடுத்த 135 போ் உள்ளனா். மேலும் இந்த நூலகத்துக்கு தினமும் குறைந்தது 50 போ் வந்து வாசித்து விட்டு செல்கிறாா்கள்.


           மாணவி நடத்தும் இந்த இலவச  நூலகத்தை கேள்வி பட்ட கும்மணம் ராஜசேகரன் மிசோரம் கவா்னராக இருக்கும் போது நூலகத்துக்கு நோில் சென்று 108 புத்தகங்களை கொடுத்து பாராட்டினாா். அதே போல் வாசிப்பு பழக்கம் உள்ளவா்களும் எழுத்தாளா்களும் யசோதாவை பாராட்டி அந்த நூலகத்துக்கு புத்தகங்களை இலவசமாக கொடுக்கிறாா்கள்.


         இந்த நிலையில் மாணவி யசோதா மீண்டும் ஒரு விதையை தன்னுள் விதைத்துள்ளாா். அது படித்து வழக்கறிஞராகி ஏழைகளுக்கு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் இலவசமாக வழக்குகளை நடத்த வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் விதைத்துள்ளாா். 


       யசோதா நடத்தும் இந்த நூலகம் தான் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு இலவச நூலகம் என்பது குறிப்பிட தக்கது. 

சார்ந்த செய்திகள்