
பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை கோரிக்கை வைத்திருந்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடியில் முட்டை பிரியாணியைக் கேரளா அரசு சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் படித்து வந்த ‘ஷங்கு’ என்ற சுட்டிக் குழந்தை, சில மாதங்களுக்கு முன்பு தனது தாயிடம் அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும் என குழந்தை மொழி பாஷையில் அப்பாவி போல் கேட்டான். அந்த தாயும், அதை தருவதாக ஒப்புக்கொண்டு உப்புமாவை ஊட்டினார். இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் குழந்தையின் தாய் பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ, கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜின் கவனத்தை விரைவாக ஈர்த்தது. இந்த வீடியோவை மேற்கோள் காட்டி வீடியோ வெளியிட்ட கேரளா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை ஷங்குவின் கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்து மாநிலம் முழுவதும் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என குழந்தையின் கோரிக்கையை கேரள அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அங்கன்வாடிகளில் உணவு மெனுவில் முட்டை பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளதாக கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, “தனக்கு உப்புமா வேண்டாம், பிரியாணி மற்றும் பொரிச்ச கோழியும் வேண்டும் என்று தனது தாயிடம் கேட்ட ஷங்கு என்ற குழந்தையின் வீடியோ வைரலானது. இந்த வீடியோ வைரலானப் பிறகு அவர் படித்து வந்த அங்கன்வாடி மற்றும் பல அங்கன்வாடிகளில் பிரியாணி பரிமாறப்பட்டது.
இதை எப்படி செயல்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்தோம்? நாங்கள் அங்கன்வாடிகளில் முட்டைகளை வழங்குகிறோம். அதை, வாரத்தில் இரண்டு நாட்களில் இருந்து வாரத்தில் மூன்று நாட்களாக மாற்றினோம். இப்போது முட்டை பிரியாணியைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். கேரளாவின் உள்ள அங்கன்வாடிகளில் புதுப்பிக்கப்பட்ட மெனுவில் தற்போது முட்டை பிரியாணியோடு சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த நியூட்ரி லட்டு, பருப்பு பாயாசம், ராகி அடை, சோயா உலர் வறுவல் மற்றும் கோதுமை புலாவ் வழங்கப்படுகிறது.