Skip to main content

கொட்டிய கனமழை... கட்டியணைத்தபடியே உயிரிழந்த குழந்தைகள் - கேரளாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

kerala land slide

 

லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும், இடுக்கி மாவட்டத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 28 வயது தாயும் 10 வயது மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தை தனது தொட்டிலிலேயே உயிரிழந்துள்ளது. அதே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளான அம்னா (7 வயது), அஃப்சன் (8 வயது) மற்றும் அகியான் (4 வயது) ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். இது மீட்புக்குழுவினரின் இதயத்தை உலுக்கியுள்ளது. தாய், மகன் மற்றும் மூன்று குழந்தைகள் கட்டியணைத்தபடி உயிரிழந்துள்ளதைப் பார்த்த அவர்கள், அது தாங்க முடியாத காட்சி என தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு நபர்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது. உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோட்டயம், கொல்லம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால், தற்போது மழை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (18.10.2021) மாலை வரை கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேபோல் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆணையங்கள் களத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.