Skip to main content

“இதற்கெல்லாம் துவண்டு போகக்கூடியவன் நான் அல்ல” - கேரள ஆளுநர் காட்டம்

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
 Kerala Governor says I am not the one who can get away with all this

கேரள மாநிலத்தை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் மீது அரசு குறை கூறுவதும், அரசு மீது ஆளுநர் குறை கூறுவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய கேரள மாநில சட்டசபையில், ஆளுநர் தனது உரையை முழுவதும் நிறைவு செய்யாமல் 1.15 நிமிடத்தில் விரைவாக முடித்தார். இது சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை அரசியல் கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், இன்று (27-01-24) ஆளுநர் கொல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலமேல் என்ற பகுதியில் ஆளுநர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, SFI மாணவர் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது உடனடியாகத் தனது காரை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்களுடன் நேரடியாக ஆளுநர் ஆரிப் முகமது கான் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து மாணவர் அமைப்பினர் முழக்கமிட்டதால் அருகே இருந்த டீக்கடையில் அமர்ந்துகொண்டு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை டீக்கடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இதனை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது இன்று (27-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆர்ப்பாட்டத்தில் முதலில் 12 பேர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின், அவர்கள் 17 பேர் என எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு இருந்தனர். அந்த வழியாக முதல்வர் சென்றால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் 22 பேர் கருப்புக் கொடியுடன் கூடிவிடுவார்களா?. அவர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது யார்?. இது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் யார்?. அது முதல்வரா? இதற்கெல்லாம் துவண்டு போகக்கூடியவன் நான் அல்ல” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.