Skip to main content

"நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தராகிவிடுங்கள்" - பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதிய ஆளுநர்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

kerala governor - pinarayi vijayan

 

மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என காட்டமாக கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சில நியமனங்கள் தொடர்பான விவகாரங்களை தனது கடிதத்தில் பட்டியலிட்டுள்ள கேரள ஆளுநர், பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

 

சமீபகாலத்தில், பல்கலைக்கழகங்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் வந்துள்ளன. குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட பல்வேறு நியமனங்கள் தொடர்பாக செய்திகள் வந்துள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தராக நான் நிலைமையை வருத்தத்தோடு கவனித்துவந்தேன். ஆனால் சமீபத்திய சம்பவங்களும், விதிகள் மற்றும் நடைமுறைகளை முழுவதுமாக மீறி விஷயங்களைச் செய்ய எனக்கு அழுத்தம் கொடுக்கப்படும் விதமும் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

 

பல்கலைக்கழகங்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதும், கல்வியாளர் அல்லாதவர்கள் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதும் தற்போதைய நிலையாக இருந்துவருகிறது. இந்தசூழ்நிலையில், பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, நீங்கள் தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும். அதன்மூலம் உங்கள் அரசியல் நோக்கங்களை ஆளுநரைச் சார்ந்திருக்காமல் நிறைவேற்றலாம் என்பதே உங்களுக்கு எனது ஆலோசனை. பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு, அரசியல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க வாய்ப்பில்லை.

 

சட்டசபை கூட்டத் தொடரில் தற்போது நடைபெறாத நிலையில், முதல்வர் (வேந்தர் பதவியை ஏற்க) அவசரச் சட்டத்தை தேர்வு செய்யலாம். நான் அதில் உடனடியாக கையெழுத்திடுவேன் என உறுதியளிக்கிறேன். இதற்கு மாற்றாக வேந்தரின் அதிகாரங்களை ஆளுநர், முதல்வருக்கு மாற்றக்கூடிய சட்டப்பூர்வ ஆவணத்தைத் தயாரிக்குமாறும் நீங்கள் அட்வகேட் ஜெனரலிடம் கூறலாம். இதற்கு சட்டப்பூர்வ வழியைக் கண்டுபிடிப்பது அட்வகேட் ஜெனரலுக்கு கடினமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். வேந்தரான என்னால் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றதாகிவிட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.