குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Advertisment

kerala governor about kerala governments move in caa issue

இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படி செல்லாது என தெரிவித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆரிப் முகமது கான், "மாநிலம் மற்றும் மத்திய அரசு அல்லது பிற மாநிலங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும்போதோ அல்லது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகும்போதே மாநில முதல்வர் ஆளுநரிடம் அதனை அனுப்பி தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். இதனை அரசியல் சட்டம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் கேரள அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது. அனைவரும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது.’’ என தெரிவித்துள்ளார்.