Kerala Chief Minister Pinarayi Vijayan says Modi's photo cannot be placed

கேரளா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு மத்திய அரசின் இலச்சினை கொண்ட பைகள் பயன்படுத்த வேண்டும் என்று கேரள மாநில உணவுத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று (12-02-24) விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் நீண்ட காலமாக பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கி வருகிறது. எனினும், இதில் இதுவரை இல்லாத வகையில் புதிய விளம்பர முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், இது போன்ற உத்தரவு தேர்தல் பிரச்சார உக்தியாகத்தான் பார்க்க வேண்டியதாக உள்ளது.

Advertisment

அதனால், பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம் தெரிவிப்போம். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரமாக மத்திய அரசு இதனை பயன்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் கேரள அரசு முயற்சி எடுக்கும்” என்று கூறினார்.