Kejriwal's response to PM Modi's charge for  Ayushman Bharat Yojana scheme

தலைநகர் டெல்லியில், உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி நேற்று (29-10-24) தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் ‘ஆயுஷ்மான் யோஜனா’ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தேன். இன்று தன்வந்திரி ஜெயந்தி நாளில் இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, நாட்டிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஆயுஷ்மான் வயா வந்தனா காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம், குடும்பச் செலவுகளும் குறையும், அவர்களின் கவலைகளும் குறையும்.

Advertisment

டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு என்னால் இந்த சேவையை செய்ய முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வலிகளையும், துன்பங்களையும் பற்றி நான் அறிந்து கொள்வேன். ஆனால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் அவர்களே, மக்களின் சுகாதார பிரச்சினையில் தவறாக பேசுவது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல. டெல்லி அரசின் திட்டத்தின் கீழ், டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் எவ்வளவு செலவானாலும் முழுமையான சிகிச்சையை இலவசமாகப் பெறுகிறார்கள். ஐந்து ரூபாய் மதிப்புள்ள மாத்திரை முதல் ஒரு கோடி மதிப்புள்ள சிகிச்சை வரை, டெல்லி அரசு ஒவ்வொருவருக்கும் முழுமையான சிகிச்சையை இலவசமாக வழங்குகிறது. என்னிடம் சொன்னால், இதில் பலனடைந்த லட்சக்கணக்கானவர்களின் பெயர்களை அனுப்புகிறேன்.

Advertisment

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைந்தார்களா? ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி கண்டறிந்தது. ஆயுஷ்மான் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலங்களில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற ஒருவரை கூட நான் இதுவரை சந்திக்கவில்லை. டெல்லி மாதிரியைப் படித்து, ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்குப் பதிலாக, டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் செயல்படுத்துங்கள். இதனால் மக்கள் பலனடைவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.