ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

kathua case final verdict by pathankot court

Advertisment

Advertisment

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம், தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சாஞ்ஜி ராம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையோடு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாஞ்ஜி ராமின் மகன் விஷால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் என தண்டனை வழக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.