Skip to main content

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் கோபமும், மோடியின் சமாதானமும்?

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

“காஷ்மீரை இரண்டாக பிரித்தது மட்டுமின்றி, சீனாவின கையில் உள்ள காஷ்மீர் பகுதியையும், பாகிஸ்தான் கையில் உள்ள காஷ்மீர் பகுதியையும் விரைவில் இந்தியாவுடன் இணைப்போம்” என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார் அமித் ஷா.
 

jai

 

 

உடனே, சில மூத்த பத்திரிகையாளர்கள் முதலில் இரண்டாக பிரித்த காஷ்மீரில் தேர்தல் நடத்த முடியுமா? மக்களுடை இயல்பு வாழ்க்கையை திரும்பக் கொண்டு வரமுடியுமா? என்பதற்கான நடவடிக்கைகளை அமித் ஷா எப்போது முடிக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
 

ஆனால், சீனாவை சமாதானப்படுத்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை மோடி அனுப்பி, சீனாவுடன் இந்தியா மோதாது. சீன ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்தியா உரிமை கொண்டாடாது என்று உறுதி அளித்திருக்கிறார். பாஜகவின் பாணியே இதுதான். சீனாவிடம் இந்தியா மண்டியிட்டது வெளியே வராது. ஆனால், சீனா ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும் மீட்கப்போவதாக அமித் ஷா பேசியதையே பிரச்சாரம் செய்வார்கள். அது நடக்காது என்பது உலகிற்கே தெரியும் என்றாலும், அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்வார்கள் என்கிறார்கள்.
 

மூத்த பத்திரிகையாளர்களின் வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. காஷ்மீர் மக்கள் விருப்பத்தின் பேரில் அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததாக அமித் ஷாவும் மோடியும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களை தெருவில் நடமாடவிடாமல், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை காஷ்மீர் தெருக்களில் நடமாடவிட்டிருக்கிறார்கள். மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்கிறார்கள்.
 

எல்லாவற்றுக்கும் மேலாக தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மீடியாக்களின் குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்ற உண்மையை உலகிற்கு சொல்ல மத்திய அரசு தடைவிதிக்கிறது. காஷ்மீர் மக்களின் தலைவரைகளை எங்கு சிறை வைத்திருக்கிறது என்பதைத் தெரிவிக்க மறுக்கும் மத்திய அரசு, நாட்டின் மிக முக்கிய அரசியல்கட்சிகளின் தலைவர்களைக் கூட காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கிறது.
 

இது நெருக்கடிநிலையைப் போல இருக்கிறது. காஷ்மீரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் போல எல்லோரும் சொல்கிறார்கள். நெருக்கடிநிலைக் கால இந்தியாவை நேரில் பார்த்து அனுபவித்திருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் வானொலி மட்டும்தான் இருந்தது. அதுவும் அரசு பொறுப்பில் மட்டுமே இருந்தது. பத்திரிகைகளை தணிக்கை செய்து அரசு எதிர்ப்பு செய்திகளை தடுத்தார்கள்.
 

ஆனால், மக்கள் நடமாட்டமோ, இல்ல நிகழ்ச்சிகளோ, அவற்றில் அரசியல் தலைவர்கள் பங்கேற்போ தடுக்கப்படவில்லை. அரங்கக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டன. செய்தித்தாள்கள் வெளிவந்தன. அந்தச் செய்தித் தாள்களில் மறைமுகமாக நாட்டு நடப்புகள் வெளிவரத்தான் செய்தன.
 

ஆனால், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியவே இல்லை. சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக காட்டப்படுகின்றன. வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் தெரிகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் காஷ்மீர் குறித்த செய்திகள் வெளிவருவதை தடை செய்திருக்கிறது மத்திய அரசு.
 

ஜெர்மனியில் ஹிட்லர் செய்த இனப்படுகொலை மிக ரகசியமாகவே நடைபெற்றது. ராணுவத்தை கையில் வைத்து, காஷ்மீரிகளுக்கு சொந்தமான நிலத்தை அம்பானி குழுமத்திற்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டமிடுவதாக ஒருபக்கம் செய்திகள் உலா வருகின்றன. மோடியோ, காஷ்மீரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களை சுதந்திரமாக எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
 

எல்லைப் பகுதியில் நடக்கும் மோதல்களைக்கூட மத்திய அரசு மக்களுக்கு சொல்லாமல் தவிர்க்கிறது என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரில் மக்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தால், எத்தனை நாட்கள் அவர்கள் உயிர் வாழ முடியும்? ராணுவத்தை வைத்து மிரட்டித்தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இப்போதும் ராணுவத்தை வைத்து மிரட்டியே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை பறித்து, மக்களை வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கிறார் மோடி.
 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை விரைவில் இழக்கப் போகிறது இந்தியா என்று அரசியல் பார்வையாளர்கள் கணிப்பது நடந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.