Skip to main content

“பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளேன்” - பிரதமர் மோடி முன்பு காஷ்மீர் முதல்வர் ஆதங்கம்

Published on 06/06/2025 | Edited on 06/06/2025

 

Kashmir Chief Minister's says he had demotion before Prime Minister Modi

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு இன்று (06-06-25) பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், செனாப் நதியின் குறுக்கே ரூ.1,400 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர், மாதா வைஷ்ணோ தேவி கோயில் உள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் உட்பட, ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருந்தனர். 

அதனை தொடர்ந்து கத்ராவில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணைநிலை ஆளுநர், மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த மேடையில் இருக்கும் நான்கு பேர், 2014 இல் கத்ரா ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பிரதமரானார். பிரதமர் அலுவலகத்தில் இணையமைச்சர் ஜீதேந்திர சிங் அப்போது உடனிருந்தார். எங்கள் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​சாஹிப், ரயில்வே இணையமைச்சராக கடமைகளைச் செய்து கொண்டிருந்தார், நான் இங்கு முதலமைச்சராக இருந்தேன். 

மாதா வைஷ்ணோ தேவியின் ஆசிர்வாதத்தால், மனோஹ் சின்ஹாவுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஆனால், எனக்கு பதவி இறக்கம் ஏற்பட்டுள்ளது. நான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தேன், இப்போது நான் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக இருக்கிறேன். அதை சரிசெய்ய அதிக நேரம் எடுக்காது என்று நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மீண்டும் உங்கள் கண்காணிப்பில் மட்டுமே மாநில அந்தஸ்தைப் பெறும்” என்று பிரதமரை நோக்கி ஆதங்கமாகப் பேசினார். 

தொடர்ந்து பேசிய உமர் அப்துல்லா, “காஷ்மீருக்குள் ரயில் செல்வதைப் பார்ப்பது பலரின் கனவு. ஆங்கிலேயர்கள் கூட காஷ்மீரை ரயிலில் இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள், ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை. ஜீலம் நதிக்கரையில் உள்ள உரியிலிருந்து ரயில் பாதையை கொண்டு வந்து நாட்டோடு இணைப்பதே அவர்களின் திட்டமாகும். ஆங்கிலேயர்களால் சாதிக்க முடியாதது பிரதமர் மோடியின் கைகளால் நடந்துள்ளது. காஷ்மீர் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நன்றி தெரிவிக்காவிட்டால் அது மிகப்பெரிய தவறாகிவிடும். இந்த திட்டம், 1983 அல்லது 1984 ஆண்டில் தொடங்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் வாஜ்பாய், இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்து பட்ஜெட்டில் ஒதுக்கீடுகளைச் செய்த பின்னரே அது நிறைவடைந்தது” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்