Karni Sena announcement Rs 1 crore reward for incident to Lawrence Bishnoi

Advertisment

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 14ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தர்ம்ராஜ் ராஜேஷ் காஷ்யப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. மேலும், பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக இந்த கொலை அரசியல் ரீதியான கொலையாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் தற்பொழுது, எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் மும்பை காவல்துறை அவர் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், ஒய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருக்கும் போது பாபா சித்திக் கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது, சிறையில் தொலைபேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுண்டர் செய்யும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிக்கவுள்ளதாக சத்திய கர்னி சேனா என்ற ராஜ்புத் அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சத்திரிய கர்னி சேனாவின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் கூறுகையில், “லாரன்ஸ் பிஷ்னோய்யைக் கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ₹ 1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும். லாரன்ஸ் பிஷ்னோய் என்கவுன்டரை நடத்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி, ஜெய்ப்பூரில் 2023 டிசம்பர் 5 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அவரது கொலைக்கு பொறுப்பேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.