Skip to main content

பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை எடுக்க அர்ச்சகர்களுக்கு மாநில அரசு தடை!

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

 


கர்நாடக மாநிலத்தில் 35,000க்கும் மேற்பட்ட கோவில்கள் அம்மாநில இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் சம்பள உயர்வு கேட்டு பல ஆண்டுகளாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கர்நாடக அரசின் 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள்  ஆரத்தி தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

 

 

KARNATAKA TEMPLE PRIEST SUFFER

 

 

 

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும். அதே சமயத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் உத்தரவால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கர்நாடகத்திடம் கற்றுக் கொள்ளுங்கள்’ - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Anbumani said TN government should learn from the Karnataka government

“தமிழ்நாட்டில் கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்திருக்கிறது. கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த முடிவு செய்துள்ள பெங்களூர் மாநகராட்சி, ‘‘பெங்களூரு மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1400 கி.மீ தொலைவுக்கு சாலைகளும், உட்புற சாலைகளும் உள்ளன. அவற்றில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப் பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப் பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும். அந்தக் கடைகள் தங்களின் பெயர்ப் பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உறுதி செய்து சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்’’ என அறிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும்போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தொடர்பாக 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும். பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு 46 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணையில் 5% கூட செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும்தான் என்றில்லை, தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் கடைகளின்  பெயர்ப் பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியைக் காண மனம் பொறுக்கவில்லை. இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறேன். 1990களின் நிறைவில் முதலமைச்சராக இருந்த கலைஞரில் தொடங்கி இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை அனைவரும் பெயர்ப் பலகைகளில் தமிழ் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும்; பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தாய்மொழி நாளான கடந்த பிப்ரவரி 21 ஆம் நாளில் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28 ஆம் நாள் மதுரை வரை ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அந்த பயணத்தின் போது கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்று வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் அறிவிக்கைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழை கட்டாயமாக்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் 9 மாதங்களாகியும் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை.

தமிழ்ப் பெயர்ப்பலகைகள் தொடர்பாக அரசுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கை வழங்கினேன். அதைத் தொடர்ந்து ஒரு சில வணிகர்கள் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும்  பெரும்பான்மையான வணிகர்கள் அதற்குத் தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகத்தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50% தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

காவிரி வழக்கு; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

 Cauvery case adjourned to September 21

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று  வழக்கின் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணை 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த வாரம் முழுவதும் எனக்கு வேறு பணிகள் இருக்கிறது. மூன்று பேர் அடங்கிய அமர்வுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இரண்டு பேர் கொண்ட அமர்வு விசாரிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், அவசரம் என்றால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நீங்கள் முறையிடலாம் என்று தெரிவித்துள்ளார்.