இதே போல் இத்தாலியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, மக்கள் அதை அலட்சியம் செய்ததால் மிகப்பெரிய அழிவை இத்தாலி சந்தித்தது. அந்த நிலைமை இந்தியாவுக்கு வராமலிருக்க , ஊரடங்கை முறையாக கடை பிடியுங்கள் என்று பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பலர் இதை பொருட்படுத்தாமல், வைரஸ் குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் அநாவசியமாக பைக்குகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.
இப்படி சுற்றியவர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கிய போலீஸார், பின்னர் கடுப்பாகி நாடு முழுவதும் லத்தியை சுழற்ற ஆரம்பித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்தால் முதலில் அடி, பின்புதான் விசாரணை என்ற நிலைமை உருவானது. சாலையில் வருபவர்களை கண்களை மூடிக்கொண்டு போலீஸார் லத்தியால் சரமாரியாக சமரசம் செய்யும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக கண்டன குரல்கள் நாடு முழுவதிலிருந்தும் வர தொடங்கியது.
அதனால் போலீஸார் தங்கள் போக்கை மாற்றி, தேவையற்ற காரணங்களை கூறி சாலையில் வருபவர்களை தோப்புக்கரணம், குட்டிக்கரணம் போட வைப்பது, உறுதி மொழி எடுக்க வைப்பது, தரையில் உருள வைப்பது போன்ற பல நூதன தண்டனைகளை வழங்கினார்கள். இதற்கிடையில் பெங்களூர் டிராஃபிக் போலீஸார், மற்ற மாநில போலீஸார்களை விட ஒரு படி மேலே சென்று கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வினோதமான முறையில் கையாண்டுள்ளனர்.
சாலையில் இரண்டு போலீஸார் கரோனா வைரஸ் வடிவிலான ஹெல்மட்டை அணிந்து கொண்டு நிற்கிறார்கள். பைக்கில் வருபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அந்த கரோனா வைரஸ் ஹெல்மெட்டை தலையில் மாட்டுகிறார்கள்.. என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்கள் விழி பிதிங்கி நிற்க, திடீரென சாவு மணி அடிக்கப்படுகிறது, சங்கு ஊதப்படுகிறது. அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல் வெளியில் சுற்றுவதால் நாம் மரணத்தின் பக்கத்தில் நிற்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சாவு மணி, சங்கு போன்றவற்றை போலீஸார் பயன்படுத்துகின்றனர். மரணத்தை நினைவுபடுத்தும் இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.