
இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் பரவி வந்த கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, நேற்று ஒரே நாளில் மட்டும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1 பேர் என மொத்த நாட்டில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மீண்டு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகளுடன் பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடையே இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.