Skip to main content

ரூ.3 கடனை திருப்பிச் செலுத்த விவசாயியை 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி... குவியும் கண்டனங்கள்...

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

karnataka farmer walks to pay 3 rs loan

 

மூன்று ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விவசாயி ஒருவரை சுமார் 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லஷ்மி நாராயணன், நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தார். இதில், ரூ. 32,000 அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,000 ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு அவர் வங்கியில் செலுத்தியிருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் லஷ்மி நாராயணனைத் தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள், மீதமுள்ள கடன் தொகை குறித்துப் பேசுவதற்காக அவரை உடனே வங்கிக்கு வரச்சொல்லியுள்ளனர். ஏற்கனவே கடன் அனைத்தையும் செலுத்திவிட்டதால் குழப்பமடைந்த அவர், அதிகாரிகள் வற்புறுத்தலால் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், பொது முடக்கம் காரணமாகப் பேருந்து சேவை இல்லாததால், தனது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று விசாரிக்கையில் அவர் செலுத்த வேண்டிய தொகை 3 ரூபாய் 46 பைசாவை உடனே செலுத்தவேண்டும் எனக் கேட்டு அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "வங்கியிலிருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், அச்சமடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் சைக்கிள் கூட இல்லை. எனவே நடந்தே வங்கிக்கு வந்தேன். இங்கு வந்து பார்த்ததும் நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று தெரிவித்தார்கள். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னைக் காயப்படுத்திவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் பிங்வா பேசுகையில், "தணிக்கை நடந்து கொண்டிருந்ததால், அவரது கடன் கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் 3 ரூபாய், 46 பைசா பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.