கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்த குழப்பங்களின்போது, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

karnataka disqualified mla controversial speech about yeddyurappa

Advertisment

Advertisment

இந்தநிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாராயண கவுடா, கர்நாடக முதல்வராக எடியூரப்பா தனக்கு 1000 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அதிகாலை 5 மணிக்கு எடியூரப்பாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது பூஜையில் இருந்த அவர், அதனை முடித்து கொண்டு என்னை பார்க்க வந்தார். மரியாதை அளிக்கும் பொருட்டு நான் எழுந்து நின்றேன். பின்னர் நாங்கள் பேச ஆரம்பித்த உடனேயே ''மீண்டும் நான் முதல்வாரக உங்களின் ஆதரவு வேண்டும்'' என்றார்.

நான், ''ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் கிருஷ்ணராஜபேட்டை தொகுதி மேம்பாட்டிற்காக நீங்கள் 700 கோடி தர வேண்டும்'' என்றேன். அதற்கு அவர், ‘கூடுதலாக 300 கோடி சேர்த்து 1000 கோடி தருகிறேன். என்னை ஆதரியுங்கள்’ என்றார். பின்னர் நான் உறுதி அளித்தபடி செய்தேன். ஆனால், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமித்ஷா தொடர்பாக எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த பேட்டி தற்போது எடியூரப்பாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.