Skip to main content

ஊரடங்கை மீறி மேகதாது அணைக்காக பாத யாத்திரை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் முடிவு!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

SHIVAKUMAR

 

காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவில் அமல்படுத்தகோரி 168 கிலோமீட்டருக்கு பாத யாத்திரை நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தார்.

 

இந்தநிலையில் கர்நாடக அரசு, வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது பாத யாத்திரையை நடத்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முடிவு செய்துள்ளார். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பாத யாத்திரையை நடத்தப்போவது குறித்து பேசியுள்ள அவர், கர்நாடகாவில் கரோனாவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: கரோனா எங்கே இருக்கிறது? கரோனாவே இல்லை. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எங்களது பாதயாத்திரையை சீர்குலைக்கவும் அரசாங்கம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோசடி செய்கிறது. பெங்களூர் நகரிலும் பிற மாவட்டங்களிலும் நிகழும் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தங்களுக்கு அர்ப்பணிப்பு இல்லாததை எங்கள் பாதயாத்திரை வெளிப்படுத்தும் என்று ஆளும் பாஜக அஞ்சுகிறது. மேகதாது திட்டம் மூலம் 2.5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து அதை நனவாக்கவே நாங்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாஜகவின் அரசியல் இல்லையா?

 

நான்  கரோனா நோயாளிகளின் பட்டியலையும் கரோனாவால் இறந்தவர்களின் பட்டியலையும் கேட்டேன், ஆனால் அரசாங்கம் அதை வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் வெளிவரும் இந்த பாதிப்பு எண்ணிக்கைகளை நான் நம்பவில்லை. நாங்கள் பல மாவட்டங்களில் சோதனையை நடத்தினோம். நாங்கள் கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசாங்கம் வெளியிடும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தவில்லை. சில மரணங்கள் வேறு காரணத்தால் ஏற்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எந்தவொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒரு கரோனா நோயாளி கூட இல்லை என்பதைக் கண்டறிந்தோம். மேலும் இதுதொடர்பான விவரங்களை வெளியிட விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன். கரோனா விஷயத்தில் அரசாங்கம் இவ்வளவு தீவிரமாக இருந்தால், சட்டசபையில் அரசின் அனைத்து ஆதரவாளர்களுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது எப்படி?.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார். 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.