Skip to main content

கர்நாடக பாஜகவில் தொடரும் அதிருப்தி... தீர்க்கும் முயற்சியில் முதல்வர்! 

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கடந்த 26ஆம் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பாவின் ராஜினாமாவிற்கு அம்மாநில பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

 

இதனையடுத்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த 28ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த நான்காம் தேதி, கர்நாடகாவின் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

 

இந்தநிலையில், புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும், தங்களுக்கு விரும்பிய பதவி கிடைக்காதவர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் இரகசியக் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த அமைச்சர்கள் எம்.டி.பி. நாகராஜையும், ஆனந்த் சிங்கையும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்ததோடு, அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சதீஷ் ரெட்டியையும் பசவராஜ் பொம்மை சந்தித்தார். இவ்வாறு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பசவராஜ் பொம்மை முயன்றுவரும் நிலையில், நாளை (10.08.2021) அப்பாச்சு ரஞ்சன் என்ற எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் பெங்களூரு நோக்கி பேரணி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியாளர்களை சமாளிப்பது கர்நாடக பாஜக தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.