Skip to main content

கர்நாடக பாஜகவில் தொடரும் அதிருப்தி... தீர்க்கும் முயற்சியில் முதல்வர்! 

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கடந்த 26ஆம் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பாவின் ராஜினாமாவிற்கு அம்மாநில பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

 

இதனையடுத்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த 28ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த நான்காம் தேதி, கர்நாடகாவின் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

 

இந்தநிலையில், புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும், தங்களுக்கு விரும்பிய பதவி கிடைக்காதவர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் இரகசியக் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த அமைச்சர்கள் எம்.டி.பி. நாகராஜையும், ஆனந்த் சிங்கையும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்ததோடு, அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சதீஷ் ரெட்டியையும் பசவராஜ் பொம்மை சந்தித்தார். இவ்வாறு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பசவராஜ் பொம்மை முயன்றுவரும் நிலையில், நாளை (10.08.2021) அப்பாச்சு ரஞ்சன் என்ற எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் பெங்களூரு நோக்கி பேரணி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியாளர்களை சமாளிப்பது கர்நாடக பாஜக தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.