கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் கடந்த செவ்வாய்கிழமை முடிவுக்கு வந்தது.

Advertisment

karnataka bjp leader yedurappa letter to governor

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாஜக வின் விதிமுறைகள்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி வழக்கப்படுவதில்லை. ஆனால் விடாப்பிடியான பிடிவாதத்தால் அந்த விதிமுறையை தளர்த்தி 76 வயதான எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரி அவர் ஆளுநருக்கு கொடுத்த கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது போலதான் கவர்னருக்கு கடிதம் அளிப்பார்கள். அதுவே மரபு.

ஆனால், எடியூரப்பா இன்று அளித்த கடிதத்தில், தான் பதவியேற்க போகும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, நான் பதவியேற்க தேவையானவற்றை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கவர்னருக்கு ஆணையிடுவது போல அமைந்துள்ளது. ஆளுநருக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு பதிலாக அவரிடம் அதிகார தொனியில் பேசுவது போன்று இந்த கடிதம் உள்ளது என கருத்து பரவி வருகிறது.