Skip to main content

1921 முதல் 2023 வரை; வரலாற்றைப் பேசிய கனிமொழி எம்.பி. - ரசித்து கவனித்த உறுப்பினர்கள்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Kanimozhi MP spoke about history From 1921 to 2023

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் கனிமொழி கூறியதாவது, “மகளிர் இட ஒதுக்கீடு குறித்துப் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் தான் அனைவராலும் ஆதரிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மசோதாவை அனைவரும் ஆதரித்து துணை நிற்கிறோம் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாய்ப்பை கூட பா.ஜ.க அரசியலாகப் பயன்படுத்துகிறது என்பது மிகவும் கெடுவாய்ப்பாக இருக்கிறது.

 

பெண்களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகிறோம் என்று ஆண்களின் பேச்சுகள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே என்று பெரியார் கூறியதை இங்கு நினைவுபடுத்துகிறேன். இங்கு பா.ஜ.க பேசுவதை பார்க்கும்போது பெரியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. ஜனநாயகம் என்பது பெண்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. அதற்கு மாறாக அவர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  1921 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் பெண்களுக்கான ஓட்டுரிமையை நீதிக்கட்சி முதன்முதலில் இந்தியாவில் கொண்டு வந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் 1927 ஆம் ஆண்டில் முதல் பெண் எம்.எல்.ஏவாக முத்துலெட்சுமி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் தேவதாசி முறையை அடியோடு ஒழித்தவர்.

 

ஆனால், 100 வருடங்கள் கடந்த பின்னும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இன்னும் நிறைவேற்றவில்லை. 1929 ஆம் ஆண்டில், சுயமரியாதை நிகழ்ச்சியில் பெரியார் கலந்து கொண்டு பேசும்போது, பெண்களுக்கான படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசியிருந்தார்.

 

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு அப்போது மத்தியில் ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அப்போது கொண்டு வந்தது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்கு அரசால் 2010 ஆம் ஆண்டு இந்த மசோதாவை ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டது. 13 வருடங்களுக்கு முன் ராஜ்ய சபாவில் இந்த மசோதா குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றேன். மீண்டும், இன்று இந்த மசோதாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். 13 வருடங்களாக நாம் இது குறித்துப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம்.

 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. பல்வேறு தலைவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகள் எடுத்து வந்தனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு 2014 ஆம் ஆண்டில் இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். அதேபோல், 2017 ஆம் ஆண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். மீண்டும், 2017 ஆம் ஆண்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் டெல்லியில் நாங்கள் பேரணி நடத்தினோம்.

 

நானும், இந்த மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். அப்போதெல்லாம், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் இந்த மசோதா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க உறுதியாக கூறியது. ஆனால், தற்போது எத்தகைய ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன். இது தொடர்பாக எந்தவித விவாதமும் இதுவரை நடக்கவில்லை. இந்த மசோதா பா.ஜ.க ரகசியமாகக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தின் போது கூட இதுகுறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் முன் உள்ள கணினியில் திடீரென இது குறித்து தகவல் வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சீருடை ரகசியமாக மாற்றப்பட்டதை போல் இந்த மசோதாவும் ரகசியமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எனினும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது மனம் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தது.  ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என்ற பாரதியார் பாடல் தான் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எனது மனதுக்குள் பாடியது. கோடான கோடி சகோதரிகள் போல் நானும் இந்த மசோதா எப்போது அமல்படுத்தப்படும் என்று காத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால், மத்திய அரசோ இந்த மசோதா அமல்படுத்தப்படும் வரை காத்துக்கொண்டிருங்கள் என்று கூறுகிறார்கள்.

 

இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. 2010 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு ஆட்சியில், இந்த மசோதா கொண்டுவரப்பட்ட போது எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால், மக்கள் கணக்கெடுப்புக்குப் பின் தான் இந்த மசோதா அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. இன்றைக்கு கூட இந்த மசோதா குறித்து, ‘இந்தியாவில் மட்டும் தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று தெரியாமல் இருக்கிறது. தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்பு மிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

 

இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க கொண்டு வந்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மசோதவை தொகுதி மறுவரையறையோடு ஏன் தொடர்புப்படுத்தி இருக்கிறீர்கள்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது, தென்னிந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு தான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றால் அது எப்போது நடக்கும்?

 

நாடாளுமன்றத்தில் பெண்களின் கருத்துகளை கேட்காமல் ஒவ்வொரு வருடமும், சராசரியாக 40 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் 141 நாடாக இந்தியா இருக்கிறது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண்கள் பிரதிநிதித்துவத்தைவிட நமது நாட்டின் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் எத்தனை காலம் தான், இந்த மசோதாவை நிறைவேற்றுவீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறது?

 

இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண், பெண்களின் குணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களைக் கடவுளாக ஏற்கிறீர்கள். அதுவே, ஒரு பெண் தனது தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை ஏற்க மறுக்கிறது. மேலும், அவர்கள் அரக்கக் குணம் கொண்டவர்களாக தான் ஏற்கிறது. இந்து மதத்தின் மீது பா.ஜ.க மிகுந்த நம்பிக்கை கொண்ட கட்சி. உங்களிடம் நான் கேட்கிறேன். காளி தைரியமான தெய்வம் இல்லையா? பின்னர் அவர்களை அவமதிப்பதற்கு நீங்கள் யார்? ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக்கூடாது?.

 

பெண்கள் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடவில்லையா? நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா? ஏன் மாயாவதி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா?” என்று பேசினார். அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜெயலலிதா.. ஜெயலலிதா” என்று குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி. “ஆம் ஜெயலலிதாவும் துணிச்சல் மிக்க பெண் தலைவர் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களுக்கு வழிபாடு தேவையில்லை. இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆண்களைப் போலவே எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.