குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் இன்று (08/02/2022) காலை 11.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து; வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது; எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை 'பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ்' என மாற்றிக் கொள்ளுங்கள்" என்று ராகுல்காந்திக்கு பதிலடி தந்துள்ளார்.
தமிழகத்தில் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் அரசை மத்திய காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசையும் காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. மாநிலங்களின் உரிமை குறித்து பேசும் காங்கிரஸ் கட்சி பல மாநில முதலமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கியது. நான் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது மத்தியில் இருந்து காங்கிரஸ் அரசு தொடர்ந்து நெருக்கடிகளை அளித்தது.
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புத்துறைக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியைக் கூட கவனிப்பதில்லை. எதிர்க்கட்சியான பிறகு நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமரின் பதிலுரையைப் புறக்கணித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரைக்கு பதில் காங்கிரஸை பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்று அக்கட்சி விமர்சித்துள்ளது.