Skip to main content

அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ...

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

2016 -ஆம் ஆண்டு 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடிதந்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது 5ஜி தொலைதொடர்பு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசு 2020-ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக 22 பேர் கொண்ட குழு அமைத்து திட்டமிடப்பட்டும் வருகிறது. 5ஜி சேவையானது 4ஜி சேவையைவிட பல மடங்கு அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டது. 5ஜி வேகம் ஒரு வினாடிக்கு 1 GB முதல் 100 GB வரை இருக்கும்.

 

jj

 

4ஜி சேவையில் தற்போது இயங்கிவரும் ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 200 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்து சாதனைப் படைத்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 290 நிமிடங்களுக்கு மேல் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு டேட்டா(DATA) பயன்பாடு 240 கோடி ஜிபிக்கும் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ உலகின் மிகப்பெரிய டேட்டா நெட்வொர்க்காக உள்ளது. இரண்டு ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்கு டேட்டா(DATA) பயன்பாடு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையில் வாய்ஸ் கால்களின் பயன்பாடு ஒரு நாளைக்கு 530 கோடி நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு வீடியோ நுகர்வு 340 கோடி மணி நேரமாக அதிகரித்துள்ளது. 
இனி வரும் காலங்களில் தொலைத்தொடர்புத் துறைக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் மிக அவசியம் என்பதால் அதற்கான கட்டமைப்புகளை செய்துவருகிறது ஜியோ. 5ஜி அலை வரிசைக்கு ஏற்ற வகையில் உபகரணங்கள், சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டிய முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.  4 ஜி சேவையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது ஜியோ. மற்றத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 வருடங்களுக்குப் பின்புதான் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று உள்ளது. ஆனால் ஜியோ இந்த இரண்டு வருடங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1GB டேட்டாவை 300 ரூபாய் என ஒரு மாதத்திற்கு தந்து கொண்டிருந்தன. ஜியோவின் அறிமுகத்திற்கு பிறகு மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிலையை மாற்றிக் கொண்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 1GB DATA பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ஜியோ சேவையின் மூலம் சில நிறுவனங்கள் தங்களின் நிலையில் மாற்றம் கொண்டு வந்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பெரும் சரிவை சந்தித்து வருவது கவனிக்கத்தக்கது.  

 

jj

 

3ஜியில் இருந்து 4ஜி சேவைக்கு மாறுவதற்கு ஏற்பட்ட காலத்தை விட 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறக் குறைவான காலமே ஆகும். அந்தளவிற்கு கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் வேகமாக அமைக்க திட்டமிட்டு வருகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். 5ஜி சேவைகளை சோதனை செய்ய ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் (BSNL) ஆகியவற்றுடன் ஜியோவையும் அழைத்துள்ளது தொலைத்தொடர்புதுறை.

 

2019 -ஆம் ஆண்டின் இறுதியில் 4ஜி சேவையைவிட 50 முதல் 60 மடங்கு வேகமான 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெறும் என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் 5ஜி சேவையை நடைமுறைபடுத்தும் அளவுக்கு ஜியோவின் கட்டமைப்புகள் உள்ளது. 2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி குறைந்த விலையில் ரிலையன்ஸ்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தி இணைய உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்குவதிலும் முனைப்புக் காட்டி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. 2020-ஆண்டின் மத்தியில் ஜியோ தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

சாட் ஜிபிடி-க்கு போட்டியாக அம்பானி வெளியிடும் ‘ஹனூமான்’

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Ambani's new 'AI' model Hanooman to compete with chat GPT!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக தற்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை பிரபல தொழிலதிபரின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது. 

இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சாட் ஜி.பி.டி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டியாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சிறந்த பொறியியல் பள்ளிகளால் ஆதரிக்கப்படும் ‘பாரத் ஜி.பி.டி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஹனூமான்’ என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது.  11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ‘ஏ.ஐ’ மாடல் வருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.