எம்.எஸ்.தோனிக்கு புதிய பொறுப்பு; ஜார்க்கண்ட் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 Jharkhand Election Commission Announcement for New charge for MS Dhoni

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஜார்க்கண்ட சட்டமன்றத்தில் தற்போதைய பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அம்மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இதில், பா.ஜ.க 68 தொகுதிகளிலும், ஏ.ஜெ.எஸ்.யூ 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி கட்சியும், புதிய ஆட்சி அமைக்க பா.ஜ.க கூட்டணி கட்சியும் தீவிர முனைப்பில் தேர்தலை சந்தித்து வருகிறது. இதனால், தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவி குமார் கூறுகையில், “மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொண்டுள்ளோம். மகேந்திர சிங் தோனி வாக்காளர்களைத்திரட்டும் பணியில் ஈடுபடுவார். மேலும், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க எம்எஸ் தோனி பணியாற்றுவார்” என்று கூறினார்.

Dhoni Jharkhand
இதையும் படியுங்கள்
Subscribe