Skip to main content

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்; உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்ட உரிமையாளர்கள்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Jewellery washed away by rainwater in Bangalore

 

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

 

சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், இந்தக் கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரில் பெய்து வரும் இந்த கனமழையால் அங்குள்ள 226 பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. அதே சமயம், மழை இனிமேல்தான் அதிகரிக்கும் என்ற நிலையில், அதற்குள் ஏற்பட்ட இத்தகைய பாதிப்புகளால் கர்நாடக மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். 

 

இதையடுத்து, பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரபலமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை தாழ்வான பகுதியில் இருக்கிறது. இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நகைக்கடைக்கு அருகில் நீர் தேங்கி இருந்திருக்கிறது. வழக்கம்போல் தேங்கிய நீர் வடிந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மழை வெள்ளம் வேகமாக கடைக்குள் புகுந்துள்ளது. அதே நேரத்தில் கனமழை மேலும் அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. 

 

இத்தகைய சூழலில் அந்த கடைக்குள் ஏராளமானோர் இருந்த போதிலும் நகைக்கடைக்குள் புகுந்த வெள்ள நீர் மிக வேகமாக, ஒட்டுமொத்த நகைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த நிலையில் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என ஒதுங்கி நின்றுள்ளனர். 

 

இதையடுத்து மழை வெள்ளத்தின் வேகம் குறைந்தபிறகு அந்த நகைக்கடை ஊழியர்கள் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீரில் மீன் பிடிப்பதைப் போல் தடவித் தடவி சில நகைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் கடையில் வைக்கப்பட்டிருந்த 80 சதவீத நகைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அதன் மதிப்பு சுமார் இரண்டரை கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.