நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு மசோதாவை கொண்டு வரும் போது, முதலில் மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற்று அதன் பிறகு மக்களவை அல்லது மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து மசோதாவிற்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலை ஏற்கனவே பெற்று, அதன் பின் நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தது எதிர்கட்சிகளுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- யை மத்திய அரசு நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அக்கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.