ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

Advertisment

jammu kashmir is going to be two union territories from tomorrow

இதனையடுத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையை குவித்தது மத்திய அரசு. மேலும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகும், முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது மத்திய அரசு. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்தநாளான நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறகு இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் மாற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக நாளை காலை பொறுப்பேற்கவுள்ளனர். அவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.