ஆனால், கடந்த 2002- ஆம் ஆண்டில் காஷ்மீர் உயர்நீதிமன்றம், பெண்களுக்கு குடியுரிமை சலுகை உண்டு என்றும் அவர் நிலம் வாங்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. எனினும், அவருடைய குழந்தைகளுக்கு, குடியுரிமை சலுகை கிடையாது என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தை சேராதவர்கள், அந்த மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது. காஷ்மீர் மாநில அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சேர முடியாது.
காஷ்மீர் அரசு வழங்கும் உதவித்தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதியுதவியும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மாநில சட்டசபை இயற்றும் எந்தச் சட்டமும், இந்திய அரசியல் சாசனத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
ஒட்டுமொத்த இந்திய அரசியல் சாசனமும், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும். புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமென்றால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
370ஆவது பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டும். மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல்படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனியாக அரசியல் சாசனமும் உண்டு.