டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், போராட்டம் நடந்த இடங்களை இரவு நேரத்தில் மாணவர்கள் சுத்தம்செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டமே இன்றைய நாடு தழுவிய மாணவர் போராட்டங்களுக்கு துவக்கப்புள்ளியாக அமைந்தது எனலாம்.
இந்தநிலையில், ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்றது போல, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த குப்பைகளை மாணவர்களே ஒன்றிணைந்து சுத்தம் செய்தனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதோடு, பலரும் இதற்காக மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.