Jagdeep Dhankar Participated event sudden noise jipmer hospital

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மூன்று நாள் பயணமாக கடந்த 15ஆம் தேது புதுச்சேரிக்கு வந்தார். அவரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் வரவேற்றனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஜெகதீப் தன்கர் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் தொடர்பாகவும் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க பிரதமர் மோடி அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைத்து வெளிநாட்டினர் அனுப்பினார். பிரதமர் மோடியின் இந்த முடிவு தேசிய மட்டுமல்லாது சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தன. தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய வளர்ச்சி விஷயங்களில் ஒவ்வொரு நாளும் ஒன்றுபட்ட பாரதம் தான் நமக்கு தேவை. இந்த முயற்சி நீண்ட தூரம் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எந்தவொரு முன்னேற்றத்திற்கும் அமைதி ஒன்றே முக்கியமான தீர்வாகும். அமைதி வலிமையான நிலையில் இருந்து வருகிறது. நாம் நமது தேசியவாதத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜெகதீப் தன்கர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் சத்தம் கேட்டது. உடனடியாக பேச்சை நிறுத்திய ஜெகதீப் தன்கர், மீண்டும் பேசத் தொடங்கினார். அப்போது மீண்டும் அலாரம் சத்தம் கேட்டது. இதையடுத்து உடனடியாக பேச்சை நிறுத்திய ஜெகதீப் தன்கர், “எனது உரையை முடிக்கச் சொல்லி அலாரமா?” என்று நகைச்சுவையாக கேட்டுவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென தீ எச்சரிக்கை அலாரம் கேட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட குத்து விளக்கில் லேசான புகை வந்ததால் தீ எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.