Skip to main content

ஆபாச வீடியோ எதிரொலி; விலகிய பா.ஜ.க வேட்பாளர்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
ithdrawn BJP candidate for video echo viral

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனையடுத்து, 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை கடந்த 2ஆம் தேதி பா.ஜ.க வெளியிட்டது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க எம்.பி ஒருவரின் பெயரில் போலி ஆபாச வீடியோ ஒன்று வெளியானதாக கூறப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநில, பாராபங்கி மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருபவர் உபேந்திர சிங் ராவத். சமீபத்தில் பா.ஜ.க வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், 195 வேட்பாளர்களில் ஒருவரான உபேந்திர சிங், பாராபங்கி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, உபேந்திர சிங் எம்.பி தரப்பில் உத்தரப்பிரதேச கோட்வாலி போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‘உபேந்திர சிங் ராவத் ஆபாச வீடியோவில் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் போலியான வீடியோ ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாராபங்கி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் உபேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டதை விரும்பாத சில சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உபேந்திர சிங் ராவத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர சிங், தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து உபேந்திர சிங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டீப்ஃபேக் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட என்னுடைய எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதற்காக நான் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாண்புமிகு தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, பா.ஜ.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட கவுதம் கம்பீர், போஜ்புரி நடிகர் பவன் சிங்கைத் தொடர்ந்து உபேந்திர சிங் தேர்தலில் இருந்து இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்