ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி தர வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் 5 நாள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐக்கு எதிராகவும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு ப.சிதம்பரம் தரப்பை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் நாளை மதியம் 12.00 மணிவரை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.