jammu kashmir

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதன் காரணமாக இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மசூத் அசார், தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத் தலைவர்களைச் சந்தித்து, ஜம்மு காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவி கோரியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணியாற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து அறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டம் எல்லைப் பகுதிகளில் தென்படுவதாகவும், கடந்த 15 நாட்களில் கிட்டத்தட்ட 10 முறை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் மூத்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், அந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற பயங்கரவாதிகளின் இயக்கத்தை உளவு அமைப்புகள் இடைமறித்துள்ளன. கையெறி குண்டு தாக்குதல், ஸ்ரீநகரின் பொது இடங்களில் தாக்குதல் நடத்துவது உள்பட தீவிரவாதிகளின் பல்வேறு வகையான தாக்குதல் திட்டம் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜான்திராத் பகுதியை ஐந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் அடைந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்குள் நுழையக்கூடும் என உளவுத்துறை அறிக்கை ஒன்று கூறுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.