Skip to main content

"ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டம்" - உளவுத்துறை எச்சரிக்கை!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

jammu kashmir

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதன் காரணமாக இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மசூத் அசார், தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத் தலைவர்களைச் சந்தித்து, ஜம்மு காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவி கோரியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணியாற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து அறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டம் எல்லைப் பகுதிகளில் தென்படுவதாகவும், கடந்த 15 நாட்களில் கிட்டத்தட்ட 10 முறை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் மூத்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற பயங்கரவாதிகளின் இயக்கத்தை உளவு அமைப்புகள் இடைமறித்துள்ளன. கையெறி குண்டு தாக்குதல், ஸ்ரீநகரின் பொது இடங்களில் தாக்குதல் நடத்துவது உள்பட தீவிரவாதிகளின் பல்வேறு வகையான தாக்குதல் திட்டம் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜான்திராத் பகுதியை ஐந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் அடைந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்குள் நுழையக்கூடும் என உளவுத்துறை அறிக்கை ஒன்று கூறுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.