Skip to main content

உளவுத்துறை எச்சரிக்கை... எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்!!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

drone

 

சமீப காலமாகவே ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமற்ற ட்ரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (23.07.2021) ஜம்மு காஷ்மீர் கனசாக்கில் வெடிபொருட்களுடன் சுற்றிய ட்ரோனைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எல்லையில் சுற்றிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்த வெடி பொருட்களைக் கைப்பற்றி இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

அடுத்த மாதம் சுதந்திர தினம் என்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

ட்ரோன்களை பறக்கவிட்ட காவல்துறை; பட்டங்கள் மூலம் பதிலடி கொடுத்த விவசாயிகள்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Police Flying Drones Farmers reaction with kite

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர். ஹரியானா காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப் பகுதிக்குள் டிரோன்களை அனுப்ப வேண்டாம் என பாட்டியாலா காவல் துறை ஆணையர் சவுகத் அகமது அம்பாலா காவல்துறை துணை ஆணையருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற உள்ளதா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.