Skip to main content

இந்தியாவின் முதல் ஏ.ஐ. பள்ளி கேரளாவில் துவக்கம்! - ஆசிரியர்களின் பணி? 

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

India's first A.I. School starts in Kerala! The work of teachers?

 

இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக ஏ.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலாவதாக தற்போது கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்த ஏ.ஐ. முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாக மாற்றும் என்றும் மனிதர்களுக்கு மாற்றாக (ஏ.ஐ.) உருமாறும் எனப் பல கருத்துகளை நாம் கேட்டிருப்போம். சமீபத்தில் பல நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில், கல்லூரிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையும் பரவி வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் முதல் பள்ளியாக கேரளா மாநிலத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவன் பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார். 

 

அப்போ இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க மாட்டார்களா? சாட் ஜி.பி.டி.யை கொண்டுதான் பாடங்கள் நடத்தப்படுமா என்றும் நினைக்கக் கூடும். ஆனால், தற்போது அந்தளவு திட்டங்களை வகுக்கவில்லை. மாறாக, பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளைப் பள்ளி பயன்படுத்த உள்ளது. பாடத்திட்டங்களை வடிவமைப்பது, தாமாகவே கற்றுக்கொள்வது, தேர்வு மதிப்பீடு மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் உதவி உள்ளிட்ட கல்வியின் பல்வேறு அம்சங்களில் மெஷின் லெர்னிங், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற (ஏஐ) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.

 

India's first A.I. School starts in Kerala! The work of teachers?

 

கேரள பத்திரிகைகளில், சாந்திகிரி பள்ளி, ஐ லேர்னிங் என்ஜின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடனும் வேதிக் இ-பள்ளியுடனும் சேர்ந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏ.ஐ. கற்றல் முறை திட்டத்தின் செயல்பாட்டில் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் மற்றும் துணைவேந்தர்கள் போன்ற வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

வேதிக் இ-பள்ளியின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு சர்வதேச தரத்துடன் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு புதுமையான கற்றல் முறையாக இது இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.

 

இந்த ஏஐ வசதி முதற்கட்டமாக பள்ளியின் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதனுடன் ஏஐ, பல கட்ட தேர்வு மதிப்பீடுகள்; திறன் மேம்பாட்டுத் தேர்வு; நேர்காணலுக்கு உதவுவது; எழுத்து திறனை மேம்படுத்துவது என ஏஐ மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது. அதற்கான உதவித் தொகைகளை பெறுவது உள்ளிட்டவற்றில் ஏஐ வழிகாட்டும் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.