Skip to main content

விமான விபத்தில் உயிரிழந்த ஐ.நா -வுக்கான இந்திய அதிகாரி...உதவி கோரும் சுஷ்மா ஸ்வராஜ்...

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

shika

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் நேற்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டினர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.மொத்தம் 157 பேர் பலியான இந்த விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஷிகா கார்க் பலியாகியுள்ளார். நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷிகாவை தவிர்த்து வைத்யா பன்னாகேஷ், வைத்யா ஹன்சின், நுகவரபு மனிஷா ஆகிய இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த  இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும், வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்திய தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள். உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள். விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் " என கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டோவை பயன்படுத்திய ரஷ்யா - பொதுச்சபைக்கு நகரும் நாடுகள்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

unsc

 

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

இதனையடுத்து ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஒரு கூட்டறிகையை வெளியிட்டுள்ளன. அதில், இந்த விவகாரத்தை ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் செயல்படாத ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு எடுத்து செல்லப்போவதாக தெரிவித்துள்ளன. மேலும் உலக நாடுகள், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து ரஷ்யாவை பொறுப்பாளியாக்கும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லை சாவடிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமால், யாரும் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மேற்கு உக்ரைன் நகரங்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இருப்பது, எல்லை பகுதிகளுக்கு வருவதைவிட பாதுகாப்பானது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம், கிழக்கு உக்ரைனில் இருப்பவர்கள் அடுத்த கட்ட அறிவுறுத்தல் வரும்வரை தற்போது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Next Story

ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

narendra modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் பிரதமர் மோடி, இம்மாதம் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடத்த இருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

 

இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய பிற குவாட் நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் தங்கள் நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, கரோனாவுக்கு எதிராக போராடுவது, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவது, சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் ஆகியவை தொடர்பாக நான்கு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

 

அதன்பின்னர் பிரதமர் மோடி, இம்மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபையின் 76வது அமர்வின் உயர்மட்ட பிரிவு பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.