Skip to main content

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்; இந்திய வீரர் மரணம்!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

Indian soldier issue in Pakistan army incident

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

அதாவது 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் மத்திய அரசு சார்பாக இன்று (08.05.2025) நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திர்னாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50  பேர் படுகாயமடைந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற வீரர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மரணம் அடைந்தார். அதே சமயம் அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதோடு அதன் அருகில் உள்ள கிராம மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

சார்ந்த செய்திகள்