இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும். வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும்; இதில் தலா 15 இந்திய மற்றும் பிரிட்டன் விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான சேவை அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 7-ஆம் தேதி வரை பிரிட்டன் - இந்தியா இடையே விமான போக்குவரத்து ரத்து என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.