Skip to main content

கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் இந்தியா!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

corona vaccine

 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வந்தது. இருப்பினும் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது.

 

இந்தநிலையில் அடுத்தமாதம் முதல் மீண்டும் இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்கப்போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஏற்றுமதியை 'வேக்சின் மைத்திரி' எனக் குறிப்பிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, கோவாக்ஸ் திட்டத்திற்கும், அண்டை நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதியில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார். உபரி தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நாட்டின் மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், அது அடுத்த மாதத்தில் உற்பத்தி நான்கு மடங்காக உயரவுள்ளது என்றும் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பயோலாஜிக்கல் - இ போன்ற நிறுவனங்களின் புதிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், இந்தாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த தடுப்பூசி உற்பத்தி 100 கோடியைத் தாண்டலாம் எனவும் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.200ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; மத்திய உயிரிதொழில் நுட்பத்துறை அறிமுகம்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Cervical cancer vaccine at Rs.200; Introduced by Central Department of Biotechnology

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஜூன் 8ல்  மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும் சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தடுப்பூசியின் ஆரம்ப விலை  200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

 

 

Next Story

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி.... கேரளா விரைகிறது மத்தியக் குழு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

One person in Kerala confirmed with Monkey Pox....Kerala rushes Central Committee!

 

 

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்தியக் குழு. 

 

"ஜூலை 12- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்திய குழு. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை மத்தியக் குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.