
இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் டோர்னியர் 228 ரக ராணுவ விமானத்தை இலங்கைக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், இரண்டு ராணுவ விமானங்களைக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இரண்டு ராணுவ விமானங்களை இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

இது குறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப் பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோர்னியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது.
வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும், இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை ராணுவ உயரதிகாரிகள், இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.