India alliance MPs are struggel in the Parliament complex

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

Advertisment

அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதித்ததைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (06.08.2024) காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியும், முழக்கம் எழுப்பினர். அப்போது மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகள் மீதான 18% ஜி.எஸ்.டி. வரியைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.