Skip to main content

கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!-சிவப்பு மண்டலமானது புதுச்சேரி!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
puducherry

 

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 10-க்குள்தான் இருந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக கரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. புதுச்சேரி கதிர்காமம் கரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காரைக்காலில் ஒருவரும், மாஹேயில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் இன்று வடமங்கலம், குருமாம்பேட், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர்க்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் மூவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இதனால் புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 27  ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ள நிலையில் 14 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனிடையே, “ ஊரடங்கு தளர்வு காரணமாக மார்க்கெட்டுகளுக்கும், அலுவலகங்களுக்கும் மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.  கரோனா தொற்று பரவுவதை தடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது. இதனால் சமூக இடைவெளி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியிலிருந்து வருபவர்கள் புதுச்சேரி மக்களுடன் கூடி கலந்துவிட்டனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது. மத்திய அரசு 12 நோயாளிகள் உள்ள பகுதி அல்லது ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 80 சதவிகிதத்தினர் எந்த பகுதியில் உள்ளனரோ அந்த பகுதியை சிவப்பு மண்டலம் பகுதியாக அறிவிக்க கூறியுள்ளது. இவை இரண்டிற்கும் புதுச்சேரி வருவதால் புதுச்சேரி சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது. எனவே வெளியிலிருந்து வருபவர்களிடம் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனாவுக்கான சிறு அறிகுறிகள் இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  எனவே புதுச்சேரி மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்'' என்று சுகாதாரத்துறை இயக்குனர் பிரசாத் குமார் பாண்டா, இயக்குனர் மோகன் ஆகியோர் கூறியுள்ளனர்.


கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு இருந்த நிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஊரடங்கு தளர்வு, கோயம்பேட்டிலிருன்து வந்தவர்கள், வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள், புதுச்சேரி வாசிகள் அண்டை மாவட்டங்களில் புழங்குவது போன்றவற்றால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிப்பதில் கெடுபிடி காட்டப்படுகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளை கட்டுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.